வெட்டவெளிதான் என் ஞானம்


தன்னியல்பாய்ப் பாயும் நதிகள்
தான்தோன்றியாய்ப் பூக்கும் பூக்கள்
சென்னியல்பாய் வாழுமென் சித்தம்
சித்தம்போக்கே சிவம்ம்ம் போக்காய்
***
மடியில் எனக்குக் கனமில்லை
வழியில் எதற்கும் பயமில்லை
தலையில் எனக்கு கனமில்லை
தடைக்கல் யாவும் படிக்கல்லே!
***
நாற்றைப் பறித்துநட் டாற்போல்
வேற்று நிலத்தும்வேர் பிடிப்பேன்
ஊற்றுக் கண்ணாய் மடைதிறந்(து)
உலக லாவிடுமென் பயணம்

மன்பதை எதிரியர் என்னெதிரி
மானுடந் தழுவிடில் சகபயணி
என்பதைச் சொல்வதே என்வாழ்க்கை
இருப்பே சிம்மசொப் பனமாய்

யாது மாகிநிற் பதனால்
யாரா யுமேநா னில்லை
தீதும் நன்றுந்தர வாரா
திருவில் நின்றதென் செம்மை

மண்ணி லூன்றியென் பாதம்
வெட்ட வெளிதானெண் ஞானம்
பண்ணி லூறியதென் கானம்
பரவ சத்தினதி மோனம்

Comments

Popular Posts

தென்புலத்தின் திருஒளியே

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்